கடந்த இரு வருடங்களுக்கு முன்பு யூத்புல் விகடனில் வெளிவந்த என் சிறுகதைகளில் ஒன்று
இயக்குனர் கணேசராஜன் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. பொக்கேக்களால் அவரது டேபிள் நிரம்பி வழிந்தது. ஓயாது சிணுங்கிய அலைபேசி, தொலைபேசி அழைப்புகளுக்கு அவரது உதவியாளர்கள் பதிலளித்தவண்ணம் இருந்தார்கள்.
டி.வி., பத்திரிகை நிருபர்கள் அவரது பேட்டிக்காக வாசலில் குவிந்திருந்தனர்.
யார் இந்த கணேசராஜன்? அவரைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்...
கணேசராஜன் தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். எழுபதுகளின் இறுதியில் அறிமுகமான இவர் கடந்த முப்பது வருடங்களில் பதினான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அவற்றில் மூன்று படங்களை தவிர மற்ற அனைத்துமே வெள்ளி விழா படங்கள். அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கணிசமான லாபத்தை சம்பாதித்து கொடுத்த படங்கள்.
இன்றைய சின்னத்திரை, திருட்டு வி.சி.டி. யுகத்திலும் மினிமம் கேரண்டி படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர். தேசிய விருது, மாநில விருது என்று இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சினிமாவுக்கென வழங்கப்படும் உயரிய விருதுகளை எல்லாம் தன் வீட்டில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவர்.
இப்போது அவர் இயக்கிய 'காதலுக்கு கண்ணில்லை' படத்தை சிறந்த படமாக மத்திய அரசு தேர்வு செய்து, ஒன்றல்ல இரண்டல்ல நான்கு தேசிய விருதுகளை இவருக்கு வழங்குவதாக காலையில்தான் அறிவித்து இருந்தது. அதற்காகத்தான் முதல் பத்தியில் சொன்ன அத்தனை களேபரங்களும்.
இனி அவரது பேட்டி...
"வாழ்த்துக்கள் சார்."
"உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி."
" ஒரே படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் எப்படி சார் சாத்தியமாயிற்று?"
"அதுக்காக தேசிய விருது கமிட்டியில் எனக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்கன்னு எழுதிடாதீங்க. இந்தப் படம் அவங்களை எதோ ஒரு வகையில் பாதிச்சிருக்கு. அதான். நானே இதை எதிர்பார்க்கல."
"நீங்கள் இயக்கிய படங்களில் இதை மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாமா?"
"அப்படின்னா மற்ற படம் நல்ல படம் இல்லையா?"
"அப்படி சொல்லல. இந்த படம் இத்தனை விருதுகளை வாங்கி இருக்கே..."
"விருது வாங்கிய படங்கள் எல்லாம் நல்லப் படமும் இல்லை. விருது வாங்காத படங்களெல்லாம் மோசமான படங்களும் இல்லை. என்னை பொறுத்தவரையில் விருதை குறிவச்சு நான் எந்த படத்தையும் இயக்குவதில்லை. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் லாபமடையனும். மக்களும் கவலையை மறந்து சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதான்"
"இந்த வயசுலயும் காதலை யாரும் சொல்லாத வித்தியாசமான கோணத்துல சொல்லிருக்கீங்களே?"
"காதலுக்கு ஏது வயசு? எல்லா வயசுலயும் காதல் வரும். கடவுள் மேல நம்ம வச்சுருக்கது காதல்தான், ஆனா அங்கே அதுக்கு பேரு பக்தி, பெத்தவங்க மேல நம்ம வச்சுருக்க காதலுக்கு பேரு பாசம். நண்பர்கள் மேல நாம வச்சுருக்க காதலுக்கு பேரு நட்பு. பெரியவங்க மேல நாம வச்சுருக்க காதலுக்கு பேரு மரியாதை. பிச்சைக்காரர்களிடம் நாம வச்சுருக்க காதலுக்கு பேரு கருணை. அப்புறம் நேசம், மனிதாபிமானம்ன்னு காதல் ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேறு பேர்ல இருக்கு. ஒரு பையன் மேல பொண்ணுக்கும், பொண்ணு மேல பையனுக்கு வர்ற ஈர்ப்புக்கு பேர்தான் காதல்ன்னு நம்ம காலம்காலமா தப்பா படிச்சுக்கு இருக்கோம்."
"சூப்பர் சார். இன்றைய இளம் தலைமுறைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
"இளைய தலைமுறைகள் இன்னைக்கு தெளிவா இருக்காங்க. நான் சொல்ல விரும்புவதெல்லாம்...இளைய தலைமுறைகளுக்கில்லை.... அவங்களை பெற்றவர்களுக்குத்தான். உங்கள் பையனோ பொண்ணோ காதலிச்சா மனப்பூர்வமா அவங்களுக்கு திருமணம் செஞ்சு வைங்க. என்ன ஜாதி, என்ன மதம், ஏழையா, பணக்காரங்களான்னு பார்க்காதீங்க. முக்கியமா கவுரவம் அந்தஸ்து பார்க்காதீங்க. நம்ம பையன் பொண்ணோட வாழ்க்கையை விட நமக்கு கவுரவம் அந்தஸ்து முக்கியமில்லை. ரொம்ப கெடுபுடி காட்டாதீங்க. அவங்க உங்களை விட்டு காதலிச்சவங்க பின்னாடி ஓடிப்போயிட்டா அப்ப எங்கே போகும் உங்க கவுரவமும் அந்தஸ்தும்ன்னு
யோசிங்க. மாறாக அவங்களை தேடி கண்டுபிடிச்சு வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டீங்கன்னா அப்ப உங்க கவுரவம் அந்தஸ்து குறைஞ்சு போயிடுமே அப்ப என்ன பண்ணுவீங்க... கடைசியா ஒன்னு சொல்றேன்... கவுரவம், அந்தஸ்துல்லாம் கையில புகஞ்சுக்கு இருக்க சிகரட் மாதிரி... அதை வீம்புக்காக கெட்டியா பிடிச்சுக்குட்டு இருந்தீங்கன்னா கைய சுட்டுடும். எப்ப தேவை இல்லைன்னு நினைக்கிறோமோ, அப்ப கீழே போட்டு மிதிச்சுடணும். மொத்தத்துல ஒரு நல்ல விஷயத்துக்காக கவுரவம் அந்தஸ்தும்பார்க்கறதும் சரி சிகரெட்டு பிடிப்பதும் சரி எப்போதுமே ஆரோக்கியமான விஷயம் இல்லை."
"அருமையான கருத்தை சொல்லிருக்கீங்க. அடுத்து..."
"போதுமே... பேட்டியை இத்துடன் முடிச்சுக்கலாமே... எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னொரு தடவை நிறையா பேசுவோம்."
"ஓகே. ரொம்ப நன்றி சார்."
***
வீட்டினுள் நுழைந்தார் இயக்குனர் கணேசராஜன். எதிர்பட்ட தன் மனைவியிடம் கேட்டார்.
"வர்ஷா சாப்பிட்டாளா?"
"இல்லங்க"
"சாப்பிட கொடுத்தியா இல்லையா?"
" கொடுத்துட்டேன். ஆனா, அழுதுகிட்டே இருக்கா. சாப்பிட மாட்டேங்குறா?"
"சரி... நான் பார்த்துக்கறேன்" - என்றவாறு தன் மகளருகில் அமர்ந்தார்.
"வர்ஷா இன்னும் நீ சாப்பிடலையாமே?"
"எனக்கு சாப்பிட பிடிக்கல."
"சாப்பிட பிடிக்கலையா... நான் சொன்னது பிடிக்கலையா?"
"ரெண்டும்தான்."
"இங்கே பார் வர்ஷா... நீ அந்த பரதேசி பயல காதலிக்கறது எனக்கு பிடிக்கல... இப்பவும் சொல்றேன் நான் உனக்கு பெரிய புரடியூசர் மகனை மாப்பிள்ளையாக்க பேசிக்கு இருக்கேன். நீ என்னன்னா..."
"சினிமாவுல மட்டும் ஏழை பணக்காரன்னு பாக்காதீங்க... காதலிச்சா கல்யாணம் பண்ணிவையுங்கன்னு சொல்றதுலாம் வெறும் பேச்சுதானா?"
"ஓ... நீ அத சொல்றியா... அதுலாம் பணத்துக்கு நான் எழுதிய வசனம். அப்படி எழுதி சம்பாரிச்சதுதான் இந்த பங்களா... கார்... இந்த வசதில்லாம். அந்த மாதிரி எழுதினாதான் மக்கள் ரசிக்கறாங்க. படம் ஓடும். ரீல் லைஃபையும், ரியல் லைஃபையும் போட்டு குழப்பிக்காத மை டியர் சைல்ட். போயி நல்ல பிள்ளையா சாப்பிட்டு தூங்கு... நாளைக்கு புரடியூசர் வீட்டில் இருந்து வாராங்க... உன்னை பொண்ணு பாக்க..."
டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு சிறுகதை.