திங்கள், 28 பிப்ரவரி, 2011

கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் சுகந்தனின் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று ஆற்றிய உரையின் சில பகுதிகளும் என் கேள்விகளும்.

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி அன்புமணி ராமதாஸ் அவர்களே, /////

உங்கள் கூட்டணியில் ராமதாஸ்  இல்லாமல் போயிருந்தால் நீங்கள் மேற்சொன்ன முறையில் ராமதாசையும், அன்புமணியும் அழைப்பீர்களா? அல்லது வேறுமுறையில் அழைப்பீர்களா?


 எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, எதிர்க் கட்சி கொறடாவாக, அண்ணா அமைச்சரவையிலே அமைச்சராக, பிறகு முதலமைச்சராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்தப் பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்./////

அப்படியானால் வருங்காலத்தில் முதலமைச்சர் பதவியை மறுத்து இதே புரோகிதர் பணியை பதவியாக கருதி செய்வீர்களா?



குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக, ராமதாஸ் மணமகளாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ////

நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?


டிஸ்கி: இதில் ஊதா எழுத்தில் உள்ளது கலைஞர் பேசியது. 
மஞ்சள் பின்னணியில் உள்ளது அடியேனின் கேள்விகள்.

##########################################################

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ங்கொய்யால யார ஏமாத்தப்பாக்குறே?......


மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்  ஒரு வயதான பணக்கார தம்பதி , அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து....

"இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க...
.அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க....
 
காலம் வேகமாக நகர்ந்தது.
பேரன் வளர்ந்து பெரியவனானதும்,
"எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான். 

அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச  ரூபாயை மட்டும் கொடுத்தார்.

உடனே பேரன் "இது அநியாயம் எங்க தாத்தா கொடுத்தது அஞ்சு கோடிரூபா, ஆனா நீங்க எனக்கு கொடுத்தது ரொம்ப கம்மி, எனக்கு அஞ்சு கோடிரூபாயும் வேணும்...இல்லாட்டி நான் வழக்கு போடுவேன்"னு சொன்னான்...

அசராத உறவினர் "நீ என்ன வேண்ணாலும் போட்டுக்க...உங்க தத்தா சாகும்போது என்ன சொல்லிட்டு செத்தாருன்னு தெரியுமா? உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு சொல்லிட்டுத்தான் செத்தாரு...அதை எழுதியும் கொடுத்துருக்காருன்னு" சொல்லிட்டாரு.

உடனே பேரன் 'நம்மள இந்தாளு ஏமாத்திட்டாரு  இவரை வேற மாதிரி சந்திக்கனும்'ன்னு நினைச்சுக்கு நேரா போயி அந்த ஊர்ல இருக்க பெரிய மனுசன்ட்ட விசயத்த சொன்னான். 
அந்த பெரிய மனுஷன் ரொம்ப நேர்மையான ஆளு....இந்த பையனுக்கு எப்படியாச்சும் பணத்தை வாங்கி கொடுத்திடனும்ன்னு நினைச்சுக்கு யோசிச்சாரு ...யோசிச்சாரு....ராத்திரி முழுக்க யோசிச்சு ஒரு ஐடியா பண்ணாரு....காலையில அந்த உறவினரை வரச்சொன்னாரு....உறவினரும் ரொம்ப தைரியமா போனாரு...

எல்லா விவரத்தையும் கேட்ட பெரிய மனுஷன்  "இந்த பையனுக்கு நீங்க வச்சுருக்க  நாலு கோடியே தொண்ணூறு லச்சரூபாய கொடுத்துட்டு, இவனுக்கு நீங்க கொடுத்த பத்து லச்சரூபாய வாங்கி நீங்களே வச்சுக்கங்க"ன்னாரு....

உடனே அந்த உறவினர் "அதெப்படிங்க முடியும்...இவனோட தாத்தா உங்களுக்கு விருப்பமானதை  கொடுங்கன்னு எழுதியே கொடுத்துட்டாரே....அப்படி இருக்கையில...எனக்கு எவ்வளவு விருப்பமோ அதைத்தான் கொடுத்துருக்கேன்"னு வாதம் பண்ணினாரு....

பெரிய மனுஷன் விடாமே...."இவனோட தாத்தா உங்கட்ட அஞ்சு கோடிரூபா கொடுத்தாரு...அதில உங்களுக்கு விருப்பமானத கொடுங்கன்னும் சொல்லிருக்காரு...இப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க அந்த பணத்துலேர்ந்து பத்து லச்ச ரூபாய மட்டும் கொடுத்துட்டு மீதிய நீங்க வச்சுக்க விருப்பபட்டுருக்கீங்க.......இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா...மீதி பணத்த நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்டீங்க....இவனோட தாத்தா சொன்னபடி உங்களுக்கு விருப்பமான பணத்தை அதாவது நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்ட  மீதி பணத்த இவன்கிட்ட கொடுங்க...அவனுக்கு கொடுத்த பணத்த நீங்க வச்சுக்கங்க...நீங்க விரும்பறத கொடுத்துடுங்கன்னுதான்  இவனோட தாத்தா சொல்லிருகாரு....உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை கொடுங்கன்னு சொல்லலியே....ங்கொய்யால யார ஏமாத்த பாக்குறே"என்று   பேசி உறவினரின் வாயை அடைத்து அந்த பணத்தை பேரனிடம் வாங்கி கொடுத்தார். 

டிஸ்கி 1: இந்த கதையோட நீதியை சொல்வதற்கு நான்ஒன்றும் ஜட்ஜ் கிடையாது...ஆகவே நீதி சொல்வதற்கு நமீதாவை தொடர்பு கொண்டிருக்கிறேன். நான் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் மச்சான். சீக்கிரம் வந்து சொல்றேன் என்று பரந்த மனசுடன்   கூறிவிட்டதால் காத்திருங்கள் நண்பர்களே....நிச்சயம் ஒரு நாள் நமீதா நீதி வெல்லும்....சே.... நமீதா நீதி சொல்லும்.

டிஸ்கி 2: இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நமீதா படம் போட்டிருக்கேன்னு யாரும் சொல்ல முடியாது ....அதான் முதல் டிஸ்கில நமீதாவ பத்தி சொல்லியாச்சே?




கழுகின் பார்வையில் இன்று

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......!


வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

மலேசியாவில் மிகவும் பிரபலமான விளம்பரம். இதை பாருங்களேன். பீட்டர் விடும் பசங்க அவங்க பாட்டியிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதை......


வியாழன், 24 பிப்ரவரி, 2011

தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

 லங்கை கடற்படையினரின் ரத்தவெறிக்கு இதுவரை   ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 8 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது 2008-ஆம் ஆண்டு 5 மீனவர்களும்,
2010- ஆம் ஆண்டு ஒருவரும் 2011 ஆம் ஆண்டு இதுவரை விஜயகுமார் உள்ளிட்ட இருவர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு  மீனவர்  விஜயகுமாரின் மரணத்திற்கு பிறகு அரசியல்வாதிகளிடம் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை பார்த்தல் நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க....மீனவர் மீது இதுவரை இல்லாத அக்கறை இப்போதுமட்டும் ஏன் இவர்களுக்கு வந்தது என்று பார்த்தோமேயானால் தேர்தல்....தேர்தல்...தேர்தலை தவிர வேறொன்றுமில்லை.

கொடநாட்டுக்கும் போயஸ்  கார்டனுக்கும்  யூ டர்ன் அடித்துக்கொண்டிருந்த  இருந்த ஜெயலலிதா வேதாரண்யம் வந்து உதவியதற்கும்,
பி.ஜே.பி-யின் வடநாட்டு தலைவி சுஷ்மா சுவராஜ் வந்து உதவியதற்கும் தேர்தலை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் நண்பர்களே?....மீனவர்கள் மீது இவர்களுக்கு அக்கறையும் இல்லை, அனுதாபமும் இல்லை. அரசியல் ஆதாயம் ஒன்றை தவிர....

இதோ...இவர்களின்  வரிசையில் இன்னொரு தலைவர்....அவர் வேறு யாருமில்லை நம் இளைய டாக்டரு விஜய்.அவரை பற்றி அதிகமதிகம் விமர்சனம் வலைப்பதிவுகளில் வந்துள்ளதால்.....நான் நேராக விஷயத்திற்கு போய் விடுகிறேன்.

சமீபத்தில் நாகையில் கூட்டம்போட்டு விஜய் பேசிய பேச்சின் ஒரு பகுதி....
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். -என்று தன திருவாய் மலர்ந்திருக்கிறார்.ஏனுங்கண்ணா....தந்தி அடிக்கவே இங்கு ஒரு தலைவர் தபால் துறையை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு போட்டியா நீங்க வேறா? வேறு ஏதாவது செய்ய சொல்லியிருக்கலாமே....என்னன்னா இப்படி பண்ணிட்டீங்க....நல்லவேளை ஓட்டுக்கேக்காம போனீங்களே?


புதன், 23 பிப்ரவரி, 2011

புலன் விசாரணை (பாகம்-1)



போலீஸ் ஜீப்  அந்த வீட்டின் வாசலில் நிற்கும் போது கணிசமான கூட்டம் கூடியிருந்தது. பத்திரிகை நிருபர்கள் குவிந்திருந்தனர்.

போலீசார் வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கே.....நடுஹாலில் நாக்கு வெளியே துருத்தியபடி பரிதாபமாக உயிரை விட்டிருந்தாள் தென்னிந்தியாவின் கவர்ச்சிக்கன்னி நடிகை  ஸ்ரீமதி.

கிளிக் கிளிக் என்று பிளாஷ் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தாள்....மன்னிக்கவும் மின்னிக்கொண்டிருந்தது நேற்றுவரை கனவுக்கன்னியாக உலாவந்து தற்போது உயிரை விட்டிருக்கும் நடிகை ஸ்ரீமதியின் உடல்.


"யாரு முதல்ல பார்த்தது?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்.
"நான்தான் சார்"
"நீங்க"
"நான் டைரக்டர் மாணிக்கராஜாட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன் சார்"
"காலையில உங்களுக்கு இங்கே என்ன வேலை"
"இன்னைக்கு காலையில் ஏழுமணிக்கு சூட்டிங் இருந்துச்சு சார். எப்போதும் ஸ்ரீமதி மேடம் சூட்டிங்க்ன்னா ஒரு மணிநேரம் அட்வான்சாவே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. இன்னைக்கு ஏழுமணிக்கு மேல ஆகியும் வரல.செல்லுல கூப்பிட்டாரு எங்க டைரக்டர். ரிங்காகுது பதிலில்லை. சரி வீட்டு போனுக்காவது கூப்பிடலாம்ன்னு கூப்பிட்டா....அதுக்கும் பதிலில்லை. டைரக்டரு டென்சனாகி என்னை பார்த்துட்டு வரச்சொன்னாரு..."
"ம்...மேலே சொல்லுங்க....."
"நான் வந்தேன் சார். கதவு திறந்து கிடந்துச்சு"
"வாட்ச்மேன் இல்லியா?"
"அவரு பேத்தி கல்யாணம் கிராமத்துல நடக்குதுன்னு ஒரு வாரம் லீவு கொடுத்து அனுப்பிட்டாங்களாம்"
"உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்"
"மூணு நாளைக்கு முன்னாடி, என்னோட கார் ரிப்பேரு....கம்பெனி வண்டிய அனுப்புங்க சார்ன்னு ஸ்ரீமதி போன் போட்டாங்க...அன்னிக்கு  நான்தான் சார் அவங்கள பிக்கப் பண்ணிட்டு வந்தேன். அப்ப வரும்போது வீட்டு வாசல்ல வாட்ச்மேன் இல்லை. எங்கே மேடம்ன்னு கேட்டதுக்கு அவங்க இப்படி சொன்னாங்க.....
"ஓகே...ஓகே....மேலே சொல்லுங்க"
"கதவு திறந்து கிடந்துச்சா?, சரி யாரோ வேண்டப்பட்டவங்களோட பேசிட்டு இருக்காங்கன்னு நினைச்சுக்கு மேடம் மேடம்ன்னு கூப்பிட்டேன். பதிலில்லை. கதவை திறந்துக்கு உள்ளே போனேன். போயி பார்த்தா நடு ஹால்ல கழுத்துல துப்பட்டா போட்டு நெருக்கி இறந்து கிடந்தாங்க....உடனே பயத்துல வெளில வந்து சத்தம் போட்டேன்.எங்க டைரக்டருக்கு இன்பார்ம் பண்ணினேன். அவருதான் உங்களுக்கு போன் பண்ணி சொல்ல சொன்னாரு...."
"உங்க டைரக்டரு எங்க?"
"வந்துக்கு இருக்காருசார்."
"ரைட்...நீங்க பாடிய டச் பண்ணிடலியே...எதுக்கு கேக்கறேன்னா....கொலைகாரன் ஏதாவது  தடயம் விட்டுட்டு போயிருந்தா  அழிஞ்சு போயிடும்.அதுக்குத்தான் கேக்கறேன்.பாரன்சிக் ஆட்கள் வரும்வரை பாடியை டச் பண்ணிடக்கூடாது."
"இல்லேசார்.யாரும் தொடல..."
"குட்...."

அப்போது டைரக்டர் மாணிக்கராஜா நுழைந்தார்.
"வணக்கம் சார்....நான் மாணிக்கராஜா"
"என்ன சார் உங்கள தெரியாதா?"
"எப்படி சார்?"
"இப்பத்தானே வந்திருக்கோம். இனிமேல்தான் விசாரனைய ஆரம்பிக்கனும். அவங்க கிடக்கற நிலமைய பார்த்தா....கடுமையா போராடியிருக்க சான்சே இல்லைன்னு தோணுது."
"சோ..."
"சோ, கொலைகாரன் அல்லது கொலைகாரி அவங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தான் இருக்கணும்."
"எப்படி சொல்றீங்க...இன்ஸ்பெக்டர்?"
"நல்லா கவனிச்சு பாருங்க....பூட்டு ஓடைக்கப்படல .....எல்லாம் வச்சது வச்சபடி இருக்கு....சோ, நல்லா பேசிக்கு இருந்தபோதே...திடீர்ன்னு எந்திருச்சு துப்பட்டாவ கழுத்துல போட்டு இறுக்கி இருக்கனும்ன்னு என்னோட கெஸ்...மத்தபடி பாடியோட பி.எம். ஐ மீன் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்ததுக்கு பின்னாடித்தான் எதுவும் சொல்லமுடியும்."
"தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்....கொல்லபபட்டிருக்கிறது சாதாரண ஆளில்லை. தமிழ்நாடே கொண்டாடுற ஒரு பெரிய நடிகை. கொஞ்சம் சீக்கிரம் கண்டு பிடிச்சீங்கன்னா....."
"ஷ்யூரா...அதுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை" இன்ஸ்பெக்டர் சொல்லிக்கு இருக்கும்போதே கான்ஸ்டபிள் வந்து
"சார் இந்த லட்டர் பாடிக்கு பக்கத்துல கிடந்துச்சு...."
வாங்கி பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்....

அதில் 'கலாச்சார சீரழிவிற்கு  கொண்டு சொல்லும் இப்படிப்பட்ட நடிகைகளை களையெடுக்கும் பணி தொடரும்'
என்று எழுதியிருந்தது.

                                                                                                                                                        (விசாரணை தொடரும்)
 



செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

என் பங்குக்கு ஏதோ ரெண்டு ஜோக்- ரெண்டு SMS ஜோக்


ரெண்டு ஜோக்

உங்க பையன் வருங்கலத்துல பிரதமரா வருவான் போல?
எப்படி சொல்றீங்க?
ஸ்பெக்ட்ரம் ன்னா என்னன்னு கேட்டதுக்கு அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. ராசாதான் அதுக்கு முழு பொறுப்புன்னு சொல்றானே...



அந்த நடிகர் முத்தக்காட்சியில நடிக்க இத்தனை டேக் வாங்கியிருக்காரே....பதட்டமா?
நீ வேற? இதான் சமயம்ன்னு அந்த நடிகையை நிறையா தடவ முத்தம் கொடுக்குராறாம்.



SMS -இல் எனக்கு வந்த ஜோக்குகள்

என்னோடு நீ இருக்கும்போது கண்களைக்கூட நான் இமைக்க மாட்டேன். ஏன் தெரியுமா?
கண்களை இமைக்கும் அந்த நேரத்தில் என் செல்போனை ஆட்டைய போட்டுட்டேனா?


ஐ லவ் யூ டா......
பிளீஸ் புரிஞ்சுக்கோ....
உன்ன பாக்காம இருக்கமுடியல...
உங்கிட்ட பேசனும் போல இருக்கு....
உன்ன நான் மிஸ் பண்ணிடுவோன்னு பயமா இருக்கு.....
ஆயரம் உம்மாடா...ஐ லவ் யூ டா...
இப்படித்தான் தினமும் நடிகை அனுஷ்கா
எனக்கு எஸ்.அனுப்புது ...
என்ன பண்றது நமக்கும் பிடிக்கனும்ல....


டிஸ்கி:SMS- ஜோக் தவிர மற்ற ரெண்டு ஜோக்குகளும் என் கற்பனையே...

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வலைச்சரமும் நானும்


கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒரு புதன் கிழமை..மதியம் என் மின்னஞ்சலை திறந்தபோது வலைச்சரம் சார்பில் அய்யா சீனா அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல். வரும் வாரம் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை தாங்கள் ஏற்கமுடியா என்று.....
கரும்பு தின்ன கூலியா? வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு  என்பது பதிவர்களுக்கான கவுரவம், ஒரு அங்கீகாரம் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட வலைச்சரத்தில் நானும் ஒருவாரம் ஆசிரியரா?.பெரிய பெரிய பதிவுலக ஜாம்பவான்கள் அலங்கரித்த பொறுப்பில் நானுமா?என்று இன்ப அதிர்ச்சி.  இருக்கும்  நான்கு நாள் அவகாசத்தில் அனைத்து பதிவர்களையும் பட்டியலிட முடியுமா என்று பலத்த யோசனை.
நம்ம தளத்தில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தேன். வலைச்சரத்திற்கு ஆசிரியரானால் பொறுப்பும்,கவனமும் வந்துவிடும்....கூடவே பயமும்.அதனால் நீண்ட யோசனைக்கு பிறகு, இரவு அய்யா சீனா அவர்களுக்கு ஒரு ஒப்புதலை தட்டிவிட்டுவிட்டு அடுத்த நாள் காலை பரபரவென்று பதிவர்களை பட்டியலிட ஆரம்பித்துவிட்டேன். ஒரு வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்து முந்தைய  சில ஆசிரியர்களின் அறிமுக நடையை பார்வையிட்டேன். அதில் ஒரு சிலர் நான் நினைத்தது போலவே அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பிறகு எனக்கொரு யோசனை. பதிவர்களின் புகைப்படத்துடன் அறிமுகம் செய்யலாமே என்று. நான் பட்டியலிட்டு வைத்திருந்த பதிவர்களின் தளங்களுக்கு சென்று புரபைலில் இருக்கும் போட்டோக்களை சேகரிக்க ஆரம்பித்தேன். சிலர் முகம் காட்டியிருந்தார்கள். சிலர் முகம் காட்ட விருப்ப படாமல் சம்பந்தமில்லாத போட்டோக்களை வைத்திருந்தார்கள். அவர்கள் சம்பந்த்தப்பட்ட பேஸ்புக்கில் சிலரது புகைப்படங்களை எடுத்தேன். மறந்தும் கூட யாரிடமும் புகைப்படம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பவில்லை, ஒரு நண்பரை தவிர.....அவர் தனது புரபைலில் போட்டோ ஏதும் வைக்காமல் வெறும் பெயரை மட்டும் வைத்திருந்தார்.அவருக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி போட்டோ கேட்டேன். அதற்க்கு அவர், மன்னிக்க வேண்டும் நண்பா...நான் இப்போது முகம் காட்டவிரும்பவில்லை.என் முகத்திற்கு பதில் இதைவைத்து கொள்ளுங்கள்  என்று பூவின் படத்தை அனுப்பியிருந்தார். அப்படியே எல்லாவற்றையும் தொகுத்து தயார்நிலை வைத்திருந்தேன்.முதநாள் அறிமுகங்களை வெளியிட்டுவிட்டு மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன்.பதிவர்கள் என்ன சொல்வார்களோவென்று.....அப்படி  சொன்னால்...புகைப்படங்களுடன் கூடிய அறிமுகமுறையை மாற்றிவிட்டு வேறொரு முறையில் அறிமுகம் செய்யலாமென்றும் நினைத்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததைவிட அந்த முறைக்கு வரவேற்ப்பு நன்றாக இருந்தது. குறிப்பாக சீனா அய்யா அவர்களே ...வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - நன்று நன்று..என்று பின்னூட்டமிட்டிருந்தார். அடுத்தடுத்த நாட்களிலும் அதே முறையை பின் பற்றி அறிமுகங்களை  வெளியிட்டு  என் பணியை முடித்துவிட்டேன். நிறைய நண்பர்களை அறிமுகம் செய்யமுடிய வில்லையே என்ற வருத்தமிருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து திரு சீனா அய்யா அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என்று திருப்தி கிடைத்தது. கடைசி நாள் இரவு என்னை வழியனுப்பும் இடுகையில் சீனா ஐயா அவர்கள்,

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் ரஹீம் கஸாலி, தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு, இதுவரை ஐநூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஐம்பத்தெட்டு பதிவர்களையும் அவர்களது சிறந்த இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார்.

அறிமுகப்படுத்தும் போது, புது விதமாக, பதிவர்களது புகைப்படத்தினையும், பெயரினையும், வலைப்பூவின் பெயரினையும், பிடித்த இடுக்கைகளின் பெயர்களையும் வெளியிட்டு புதுமை படைத்துள்ளார்.

நண்பர் ரஹீம் கஸாலியினை, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
 என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் நன்றி....மேலும்...எனக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்ட, வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்த வலைச்சரத்தில்  நாட்கள் போதவில்லை என்பதால் இனி வரும் வாரங்களில், வாரத்திற்கு ஒருமுறை சில பதிவர்களை என் தளத்திலேயே அறிமுகம் செய்யலாமென்று இருக்கிறேன். அதற்கும் ஆதரவு தருவீகள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன். அட....சொல்ல மறந்துட்டேங்க....இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக நம்ம பிலாசபி பிரபாகரன் கலக்குறார். அவர் புதிய பதிவர்களை தேடிப்பிடித்து அறிமுகம்
செய்து ஆதரவளிப்பதில் அவருக்கு நிகர் அவரே...அவரின் முயற்ச்சிக்கும் நான் ஆதரவளிப்போம் நண்பர்களே....

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும்.-ராமதாஸ் நேற்று

  




' பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி...''- இதுதான் டாக்டர் ராமதாஸின் தேர்தல் கால கோஷம்
ஆனால், இந்தத் தேர்தலில்... மதிமுகவும், மார்க்சிஸ்ட்டும் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுடன் ''டூ'' விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டாக்டரின் வாக்கு பலிக்குமா? தைலாபுரத்தில் இருந்த அவரிடமே சில கேள்விகளை முன் வைத்தோம்..
' அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று செய்திகள் வருகிறதே ?''
'' கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் ஒரேயொரு தொகுதிப் பங்கீடு,பெரும் சிக்கலில் இருந்தது. அந்த ஒரு தொகுதியால் அந்த இரண்டு இயக்கங்களின் கூட்டணியே முறிந்து விட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால், அந்த இயக்கங்களின் மேலிடத் தலைவர்கள் <உட்கார்ந்து பேசிச் சரி செய்தார்கள். அதுபோலவே எங்கள் கூட்டணியில் இருக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலை, எங்கள் கூட்டணித் தலைவர் சரி செய்வார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நாற்பதும் எங்கள் கையில்தான் !''
' அதிமுக கூட்டணிக்குள் புதிதாகப் போன வேகத்திலேயே தேவையான தொகுதிகளைப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டீர்கள் ! உங்கள் வருகைதான் மதிமுவை அந்தரத்தில் விட்டுவிட்டதாகப் பேசப்படுகிறதே ?''
'' தேர்தல் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு ஒரே சுற்றுப் பேச்சு வார்த்தையில் முடிந்து விடாது. தொடர்ந்து பேசித்தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். எங்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடன் மோதவிட, உளவுத்துறை தனது திருப்பணியை ஆரம்பித்திருக்கிறது. அதை எங்கள் கட்சித் தோழர்கள் நம்ப மாட்டார்கள். பாமகவுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டிருப்பது இயற்கையான கூட்டணி !
நாங்கள் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே மதிமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்தத்தோழமைதான் எங்களை ஓரணியில் சேர்த்தது. வைகோ மனம் புண்படும்படியாக எதுவும் நடக்காது. எங்கள் கூட்டணிக்குள் பெரும் புயல் வீசுவதாக எண்ணி, கலைஞர் இரண்டு மூன்று நாட்களுக்கு அற்ப சந்தோஷம் அடைந்துகொள்ளலாம். பாவம், இந்தத்தேர்தலில் அவர் அணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. குறைந்த பட்சம் இந்த அற்ப சந்தோஷமாவது மிஞ்சட்டுமே !''
'' தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் போகப் போவதாகவும், அதனால் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சுக்கள் உங்கள் கூட்டணி மேடைகளில் இருக்காது என்றும் வரும் செய்திகள் பற்றி ?''
'' இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்னை, பிரதான பங்கு வகிக்கும். குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும். ஈழப்பிரச்னை பற்றி எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிய கூட்டங்களில், கட்சி பேதமின்றி இளைஞர்கள் பெரும் திரளாகத் திரண்டார்கள் !
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க நானும் வைகோவும் சென்றபோது பாமக., மதிமுக தொண்டர்கள் எங்களை வரவேற்று பிரம்மாண்டமான நுழைவு வாயில்களை வைத்திருந்தார்கள். திமுகவைப் பற்றி பேசுவதற்கே எங்கள் மேடைகளில் நேரம் போதாது. 77-ம் வருடம் நாடெங்கும் நெருக்கடி நிலை பிரதானமான பிரச்சாரமாக அமைந்தது. தேர்தல்முடிந்து, நாற்பது எம்.பி.க்களை கையில் வைத்திருக்கப்போகும் எங்கள் கூட்டணி ஆதரிக்கும் கட்சியில்தான் மத்தியில் ஆட்சியமைக்க முடியும் ! அந்த வகையில், எங்கள் கூட்டணியின் தலைவர் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்.''
'' எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறீர்கள் ! எப்படியிருக்கிறது அவருடைய அணுகு முறை ?''
''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன !''
'' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''
'' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !''
''புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பழைய எம்.பி.களுக்கே திரும்பவும் ஸீட் கொடுத்திருக்கிறீர்களே ?''
எங்கள் எம்.பி.க்கள் எல்லோருமே பிரதமராலும், சோனியா காந்தியாலும், சபாநாயகராலும் பாராட்டப் பெற்றவர்கள். தொகுதி மக்களாலும் பாராட்டைப் பெற்றவர்கள். அதெல்லாம் நாடாளுமன்றக் குறிப்பிலேயே இடம் பெற்றிருக்கிறது. நான் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து, லண்டனில் இருக்கும் '' எகனாமிக் ஸ்கூல்'' மற்றும் ஹார்வர்ட் பல்கலைகழகத்துக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன். அங்கே அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு, அடுத்த கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஸ்டார் வேட்பாளர்கள் !''
'' உங்கள் அன்புத் தம்பி திருமாவளவன், சிதம்பரத்தில் உங்கள் கட்சியை எதிர்த்து களம் காண்கிறாரே? ''
''வட மாவட்டங்களில் அண்மைக் காலமாக எந்த மோதலும், கலவரமும் இல்லாத ஒரு சூழ்நிலையை நானும் அவரும் சேர்ந்து ஏற்படுத்தினோம். இணைந்திருந்த எங்கள் கைகளை, கலைஞர் சூழ்ச்சி செய்து பிரித்து விட்டார். நான் தம்பியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வந்து பேசினார். நான்கு முறை தனியாகப் பேசினோம். எந்த உடன்பாடும் வரவில்லை. பிறகு ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக என்னை திருமாவும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் சந்தித்தார்கள். நான் அவர்களிடம், ''எங்களைக் கூட்டணியில் இடம்பெறச் செய்ய, திமுக தரப்பிலிருந்து ஒரு மாவட்டச் செயலாளர்கூட என்னை அழைக்கவில்லை ! நீங்கள் நட்பின் அடிப்படையில் அழைக்கிறீர்கள் ! நட்பு வேறு., அரசியல் வேறு...'' என்று சொல்லி விட்டேன். அதன்பிறகு வேலூரில் நான், வைகோ,நெடுமாறன், மகேந்திரன் அனைவரும் திருமாவளவனிடம் பேசினோம். ''சரி., உங்கள் கூட்டணியில் இருக்கிறேன்...'' என்று திருமாவளவன் சொன்னார்.
அப்படிச் சொன்னவர், சிறுத்தைகளின் செயற்குழுவைக் கூட்டி முடித்த பிறகு என்னிடம் பேசினார். அப்போது, ''நம்முடைய இயக்கத்தில் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது திமுக அரசு. அதனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் திமுக-வில் இருக்கக்கூடாது என்று என் தோழர்கள் சொன்னார்கள். இருந்தாலும், நான்தான் ஒன்றரை மணிநேரம் பேசி அவர்களை திமுக கூட்டணியில் இருக்க சம்மதிக்க வைத்தேன் !'' என்று சொன்னார். எதனால் இந்த மாற்றம் என்று புரியவில்லை ! தம்பிக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை ! ஆனால், நட்புக்காக நான் கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க முடியாது ! சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிட்டால், நாங்கள் அவரை ஜெயிக்க விடமாட்டோம்.
 -ஜூனியர் விகடன் ( 08- 04- 2009)


வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இன்று என் பையனோட பிறந்த நாளுங்கோ



(என் பையன் தான்.ஒரு வித்தியாசத்திற்காக பெண் வேடமிட்டு).....












வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....

புதன், 16 பிப்ரவரி, 2011

இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி......

இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி ,  மழைன்னா மழை அப்படியொரு மழை. காத்து மின்னல், இடின்னு ஊரே கலகலத்து போறமாதிரி மழை. அந்த வீட்டுல புருசன் பொண்டாட்டி புள்ள மூணுபேரும் இருந்தாங்க....பொண்டாட்டிகாரி  வெளியே எட்டிப்பாத்து மழைய ரசிச்சுக்கு இருந்தா...புருசன்காரன் சத்தம் போட்டு கூப்பிட்டான்...
"வீட்டுக்குள்ள வாடி....மழையே பாக்காதவ மாதிரி இப்படி வேடிக்க பாக்குறே?"
"இல்லேங்க....மின்னல பாருங்க அழகா கொடி கொடியா போகுது"
"போகுது...போகுது...ஏன் போகாது.....ரொம்ப நேரம் பாத்துக்கு இருந்தேன்னா கண்ணும் சேர்ந்து போயிரும்..உள்ளே வாடி"
"சும்மா போங்க...உங்களுக்குத்தான் ரசனையே இல்லே....இருங்க இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்க பார்த்துட்டு வந்துர்றேன்."
"நான் சொல்றத சொல்லிட்டேன்...அதுக்கப்புறம் உன் இஷ்டம்.அப்புறமா கண்ணு போச்சு...மூக்குபோச்சுன்னு சொல்லக்கூடாது ஆமா?"
அவன் சொல்லிட்டு இருக்கும்போதே ஒரு மின்னல்தாங்க மின்னுச்சு....அப்படியொரு வெளிச்சம். அத அப்படியே புடிச்சு சேமிச்சா இன்னும் ஒருவருஷம் ஆற்காடு வீராசாமி கவலையில்லாம இருப்பாரு....அவன் பொண்டாட்டி பட்டுன்னு கண்ணமூடி திறந்தா பாருங்க....ஒண்ணுமே தெரியல...எல்லாப்பக்கமும் இருட்டு .....அய்யய்யோ...புருஷன் சொன்னது உண்மையா போச்சே...எனக்கு கண்ணு குருடா போச்சேன்னு நெனச்சுக்கு ஒப்பாரி வச்சு கதறுனா.....
"நீங்க சொல்லசொல்ல கேக்காம மின்னல பாத்தது தப்புதான்.இப்ப எனக்கு கண்ணு போச்சே...ஒண்ணுமே தெரியலியே...நான் எப்படி இனி குருடியாவே காலந்தள்ளுவேன். ஐயோ...என்ன எப்படியாவது காப்பாத்துங்க..."
"இப்ப என்னாச்சுன்னு இப்படி அழுது ஊரக்கூட்டுறே......கண்ணும் போகல...ஒரு மண்ணும் போகல.....நல்லா பாரு கரண்டு போச்சு.....இப்படி மின்னல் மின்னினா...கரண்டு போகாம என்ன செய்யும்? அதான் உனக்கு ஒன்னும் தெரியல... இப்ப பாரு எல்லாம் தெரியும்" என்றவாறு ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தினான்.

:

வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

காக்டெயில் பக்கங்கள்

நகைச்சுவை

ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உடல் சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. அவர்களின் வழக்கப்படி ஒவ்வொருவரும் சவக்குழிக்குள் பணம் போடவேண்டும். போட்ட பணத்துடன் அப்படியே புதைத்துவிடுவார்கள். ஆளாளுக்கு நூறு ஐநூறு ஆயிரம் என்று குழிக்குள் போட்டபடி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் குழிக்குள் இறங்கி அவ்வளவு பணத்தையும் அள்ளினான். மற்றவர்கள் அவனது செய்கையை விநோதமாக பார்த்தபடி இருந்தார்கள். அதில் ஒருவன் அவனை பார்த்து
"எதுக்குப்பா எல்லா பணத்தையும் எடுத்த, கீழே போடுப்பா" என்றான். இவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் பணத்தை எண்ணி சட்டை பைக்குள் வைத்தபடி
"எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க....நம்ம வழக்கப்படி பொணத்த புதைக்கையில பணம் போட்டு பொதைக்கணும்."
"அது எல்லோருக்கும் தெரியும்.நீ ஏன் அந்த பணத்த எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கிட்டே?"
"இருங்க சொல்றேன்.....அந்த பணத்த எண்ணிப்பார்த்தேன். மொத்தம் இருபத்து நாலாயிரம் ரூபா இருந்துச்சு....நான் என் பங்குக்கு ஒரு ஆயிரம் ரூபா போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா பணம் எடுத்ததுக்கு வரல....அதனால...."
"அதனால?"
"இந்த இருபத்து நாலாயிர ரூபாயை நான் எடுத்ததுக்கு அதுக்கு பதிலா இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி குழிக்குள் போட்டுடுறேன்" என்ற படி செக் எழுதி பிணத்தின் மேல் போட்டான்.

=====================================
ஒரு கவிதை

குடியை கெடுப்பது 
மட்டும் குடியல்ல...
குடியை வாழவைப்பதும் 
குடிதான்- ஆம்....
பல குடியை கெடுத்து 
சில குடியை வாழவைக்கிறதே......


=======================================

ஒரு விளக்கம்


'ஆவின் பால்' இன்று பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தை. அதில் "ஆவின்" என்பது ஆங்கில வார்த்தை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால் ஆவின் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை என்று உங்களுக்கு தெரியுமா?
தமிழ் மொழியில் ஒரேழுத்து வார்த்தைகள் என்று ஒரு வகை உண்டு. என்றால் பசு.
ஆ-வின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்.

===========================================

ஒரு குறும்படம்

சக பதிவர்களான எடக்கு மடக்கு வலைப்பதிவை சேர்ந்த ஆர்.கோபி, லாரன்ஸ் இருவரும் வெளிநாட்டில் நடக்கும் மோசடியை மையக்கருவாக வைத்து சித்தம் என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த குறும்படத்தின்  சுட்டி கீழே...



பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை அவர்களின் வலைத்தளத்தில் சொல்லுங்களேன்.

டிஸ்கி: இதில் கவிதையும், விளக்கமும் மீள்பதிவு

வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....



திங்கள், 14 பிப்ரவரி, 2011

இதனால் சக பதிவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....




இந்த வாரம் முழுவதும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால்,  வேலைப்பளு(?) கொஞ்சம் அதிகமாகி விட்டது. எனவே இன்று பதிவிட வில்லை. இதனால் சக பதிவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....அப்படியே வலைச்சரத்திற்கு போய் வாக்கிட்டு பின்னூட்டமிட்டு    உங்கள் ஆதரவை எனக்கு தாரீர் தாரீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வலைச்சரத்தில் எனது இன்றைய அறிமுகங்களை காண........சுட்டி


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ.......(காதலர் தினம் ஸ்பெஷல்)

அன்பு நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். உங்களின் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் வலைச்சரத்தில் தந்து என்னை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப்பாடல் மலேசியா தமிழ் ஆல்பத்தின் பாடல்.....
கேட்டுப்பாருங்கள்....உங்கள் இதயத்தை தொலைத்துவிடுவீர்கள். 







 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

காசா பணமா கொஞ்சம் சிரிங்க சார்





டிஸ்கி: கடந்த இரு நாட்களாக ஒரு முக்கியமான வேலையின் காரணமாக நண்பர்களின் தளத்திற்கு சென்று வாக்கிடவும்,பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

அரசியல்வாதிகளும் நானும்


இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்: தமிழக நிதியமைச்சர்அன்பழகன்

காப்பாற்றப்படுவது ஏழைகளா? அல்லது அந்த இலவசங்கள் மூலம் ஓட்டு பொறுக்கி சம்பாதிக்க நினைக்கும் அரசியல்வாதிகளா? 
---------------------------------------------------------------


 
  தமிழுக்கு, நாட்டுக்கு, இந்த சமுதாயத்திற்கு தொண்டாற்றுபவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனப் பார்க்காமல், அவர்கள் செய்த தியாகத்தை, தொண்டை மட்டும் பார்த்து, அவர்களை ஏற்றி போற்றும் பணியை தி.மு.க., அரசு தொடர்ந்து செய்து வருகிறது.:தமிழக முதல்வர் கருணாநிதி

அதனால்தான் ராசாவின் தொண்டை ,தியாகத்தை பார்த்து....ராசாவை பாராட்ட கடமை பட்டுள்ளேன், வாழ்த்த கடமை பட்டுள்ளேன் என்று சொன்னீர்களோ....
--------------------------------------------------------------------



 பல கட்சிகளை வாழவைத்தோம்: வன்னியர்களை யாரும் வாழ வைக்கவில்லை: பா.ம.க.குரு

அப்படியானால்....சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் இன்று வளமையுடன் வாழ்கிறாரே...அவர் வன்னியர் இல்லியா?
--------------------------------------------------


மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம்; நாங்கள் போட்டியிடவும் மாட்டோம்:  சீமான்

சார்...தேர்தல் முடிவதற்குள்ள சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க...வரும்...ஆனா...வராது பாணியில் மாற்றி மாற்றி குழப்பாதீங்க...
 --------------------------------------------

 
சுப்ரமண்யம் சுவாமி ஆதாயம் கிடைக்குமென்றால் மனித கழிவையும் தொடத்துணியும் ஒரு அற்ப பேர்வழி: தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன்

அப்படின்னா....மனிதக்கழிவை கையில் அள்ளுபவர்களெல்லாம் அற்பமானவர்களா?

புதன், 9 பிப்ரவரி, 2011

மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கும்- பென்ஸ் பேருக்கும் உள்ள வித்தியாசம் 18+

ஒரு சபல பேர்வழி  விமானத்தில் பறந்து கொண்டிருந்தார்.

அழகான ஒரு பணிப்பெண் (ஏர் ஹோஸ்டஸ்) “சார் ஏதாவது சாப்பிட வேண்டுமா?” என்றாள்.
அதற்கு சபல பேர்வழி  “நான் சாப்பிட விரும்புவதை உன்னால் தர முடியாது” அப்படின்னார்.

அவள் புரிந்து கொண்டாள். மீண்டும் அவர் “உன் பெயர் என்ன?” என்றார்.

அவள் “பென்ஸ்  சார்” என்றாள். அவர் ஆச்சரியமாக “அழகான பெயர், உனக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கும்   ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?”

அவள் “ஆமாம் சார்”

அவர் “எப்படி”

அவள் “இரண்டும் ஒரே விலைதான்” என்றாள்.

டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சாருவின் தேகம்- விமர்சனம்

 
தேகம்ன்னா அப்படியொரு  தேகம் சாருவுக்கு.....
ரொம்ப ஒடிசலான தேகம்
காத்து அடிச்சாக்கூட பறந்துடுவாறு  நம்ம சாரு
நெஞ்சில் மொசுமொசுன்னு கொஞ்சம் வெள்ளைமுடி
எலும்பை சற்றே இருக்கி மூடியது போல  வெள்ளைத்தோல்
பெரிய சிக்ஸ் பேக்கெல்லாம்  கிடையாது சாருவுக்கு
தொந்தி தொப்பையில்லாத சிம்ரன் இடுப்பு
இவ்வளவுதாங்க சாருவின்....
  அதாங்க....கமலஹாசனின் அண்ணனும்
சுஹாசினியின் தந்தையும்
மணிரத்தனத்தின் மாமனாராகிய
சாருஹாசனின் தேகம்


டிஸ்கி: நீங்கள் வேறு எந்த தேகத்தையாவது.....எந்த சாருவையாவது நினைத்து வந்திருந்தால்....வெரி ஸாரி....


திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஐயோ...நமக்கு எதுக்குங்க சிலை?

எங்கெங்கு காணினும் சிலைகளடா என்று சொல்லுமளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிலைகள்.

இன்றைய இந்தியாவில் கோவில், பள்ளிக்கூடம், டாஸ்மாக் இல்லாத ஊர்கள் கூட உண்டு.
ஆனால், சிலைகள் இல்லாத இடங்களே இல்லை.

அந்தகாலத்து மன்னர்களில் ஆரம்பித்து சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள், மற்றும் சினிமா நடிகர்களுக்கு கூட சிலைகள் உண்டு.
நெஞ்சில் நிறுத்தவேண்டிய தலைவர்களை சிலைகளாக்கி நடுவீதியில் நிறுத்தி காக்கா
, குருவிகளுக்கு கக்கூசாக்கி இருக்கிறார்கள்.
இவர்களின் பிறந்தநாளுக்கு,இறந்தநாளுக்கு, இன்னபிற விசேஷ நாட்களில் ஒரு மாலை போடுவதுடன் சரி.அதன் பிறகு அந்த சிலைகளை கண்டுகொள்வதே இல்லை.

வேறு எதற்கு இந்த சிலைகளை இங்கு பயன் படுத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால்....
ஒரு கட்சியினர்மீது இன்னொரு கட்சியினர் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கும், ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினர் மீது காட்டும் துவேஷங்களுக்காகவும் இன்று சிலைகள் பயன்படுத்தப்படுகிறது. இன்று தென் மாவட்டங்களில் நடக்கும் ஜாதிசண்டைகளுக்கு இந்த சிலைகள் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. இந்த ஜாதித்தலைவரின் சிலைக்கு செருப்புமாலை போட்டிருக்கிறார்கள், அந்தகட்சித்தலைவரின் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லாமல் பொழுது விடிவதேயில்லை. இதனால், பரஸ்பரம் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாவதும்,வீடு,கடை, பொது சொத்துக்களை நாசப்படுத்துவதும் நடக்கிறது.

ஏறக்குறைய பெருவாரியான நாடுகளில் சிலைகள் உண்டு. அங்கெல்லாம் ஒரு அடையாளமாகத்தான் சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இப்படியல்ல....


நான் சொல்வதெல்லாம்.....
இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த சிலைகள் தேவையா?
ஆம்..தேவைதான் என்றால் இந்த சிலைகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் நாடு அமைதியாக இருக்கும்.

அதற்கு என்ன செய்யவேண்டும்?....
சிலைகளுக்கு இரு காவல்காரர்களை நியமித்தால் காவல்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அடுத்த நாட்டிடம் காவல்காரர்களை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
அந்தந்த ஊரிலிருக்கும் எல்லா சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்து, சுற்றிலும் சுவர் எழுப்பி அங்கு இரு போலீஸ்காரர்களை காவலுக்கு நியமிக்கலாம்.
அல்லது அனைத்து சிலைகளையும் கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை போல உயரமாக யார் கைக்கும் எட்டாதபடி வைக்கலாம்.
அல்லது, சிலைகளை கண்காணிக்க அந்த சிலைகளுக்கு எதிரில் ஒரு வீடியோ கேமரா வைத்துவிடலாம்.
இப்படி செய்வதன் மூலம் சிலைகளை சேதப்படுத்த முடியாமல் காக்கலாம். மனித உயிர்களையும், பொது சொத்துக்களையும் காக்கலாம்.
நான் சொல்வது அபத்தமாக இருந்தாலும்கூட நாடு அமைதியாக இருக்கவேண்டுமே...வேறு என்ன செய்வது?

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

காதலுக்கு கண்ணில்லை

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு யூத்புல் விகடனில் வெளிவந்த என் சிறுகதைகளில் ஒன்று


யக்குனர் கணேசராஜன் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. பொக்கேக்களால் அவரது டேபிள் நிரம்பி வழிந்தது. ஓயாது சிணுங்கிய அலைபேசி, தொலைபேசி அழைப்புகளுக்கு அவரது உதவியாளர்கள் பதிலளித்தவண்ணம் இருந்தார்கள்.

டி.வி., பத்திரிகை நிருபர்கள் அவரது பேட்டிக்காக வாசலில் குவிந்திருந்தனர்.
யார் இந்த கணேசராஜன்? அவரைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்...

கணேசராஜன் தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். எழுபதுகளின் இறுதியில் அறிமுகமான இவர் கடந்த முப்பது வருடங்களில் பதினான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அவற்றில் மூன்று படங்களை தவிர மற்ற அனைத்துமே வெள்ளி விழா படங்கள். அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கணிசமான லாபத்தை சம்பாதித்து கொடுத்த படங்கள்.

இன்றைய சின்னத்திரை, திருட்டு வி.சி.டி. யுகத்திலும் மினிமம் கேரண்டி படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர். தேசிய விருது, மாநில விருது என்று இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சினிமாவுக்கென வழங்கப்படும் உயரிய விருதுகளை எல்லாம் தன் வீட்டில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவர்.

இப்போது அவர் இயக்கிய 'காதலுக்கு கண்ணில்லை' படத்தை சிறந்த படமாக மத்திய அரசு தேர்வு செய்து, ஒன்றல்ல இரண்டல்ல நான்கு தேசிய விருதுகளை இவருக்கு வழங்குவதாக காலையில்தான் அறிவித்து இருந்தது. அதற்காகத்தான் முதல் பத்தியில் சொன்ன அத்தனை களேபரங்களும்.
இனி அவரது பேட்டி...

"வாழ்த்துக்கள் சார்."
"உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி."

" ஒரே படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் எப்படி சார் சாத்தியமாயிற்று?"
"அதுக்காக தேசிய விருது கமிட்டியில் எனக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்கன்னு எழுதிடாதீங்க. இந்தப் படம் அவங்களை எதோ ஒரு வகையில் பாதிச்சிருக்கு. அதான். நானே இதை எதிர்பார்க்கல."

"நீங்கள் இயக்கிய படங்களில் இதை மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாமா?"
"அப்படின்னா மற்ற படம் நல்ல படம் இல்லையா?"

"அப்படி சொல்லல. இந்த படம் இத்தனை விருதுகளை வாங்கி இருக்கே..."
"விருது வாங்கிய படங்கள் எல்லாம் நல்லப் படமும் இல்லை. விருது வாங்காத படங்களெல்லாம் மோசமான படங்களும் இல்லை. என்னை பொறுத்தவரையில் விருதை குறிவச்சு நான் எந்த படத்தையும் இயக்குவதில்லை. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் லாபமடையனும். மக்களும் கவலையை மறந்து சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதான்"

"இந்த வயசுலயும் காதலை யாரும் சொல்லாத வித்தியாசமான கோணத்துல சொல்லிருக்கீங்களே?"
"காதலுக்கு ஏது வயசு? எல்லா வயசுலயும் காதல் வரும். கடவுள் மேல நம்ம வச்சுருக்கது காதல்தான், ஆனா அங்கே அதுக்கு பேரு பக்தி, பெத்தவங்க மேல நம்ம வச்சுருக்க காதலுக்கு பேரு பாசம். நண்பர்கள் மேல நாம வச்சுருக்க காதலுக்கு பேரு நட்பு. பெரியவங்க மேல நாம வச்சுருக்க காதலுக்கு பேரு மரியாதை. பிச்சைக்காரர்களிடம் நாம வச்சுருக்க காதலுக்கு பேரு கருணை. அப்புறம் நேசம், மனிதாபிமானம்ன்னு காதல் ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேறு பேர்ல இருக்கு. ஒரு பையன் மேல பொண்ணுக்கும், பொண்ணு மேல பையனுக்கு வர்ற ஈர்ப்புக்கு பேர்தான் காதல்ன்னு நம்ம காலம்காலமா தப்பா படிச்சுக்கு இருக்கோம்."

"சூப்பர் சார். இன்றைய இளம் தலைமுறைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
"இளைய தலைமுறைகள் இன்னைக்கு தெளிவா இருக்காங்க. நான் சொல்ல விரும்புவதெல்லாம்...இளைய தலைமுறைகளுக்கில்லை.... அவங்களை பெற்றவர்களுக்குத்தான். உங்கள் பையனோ பொண்ணோ காதலிச்சா மனப்பூர்வமா அவங்களுக்கு திருமணம் செஞ்சு வைங்க. என்ன ஜாதி, என்ன மதம், ஏழையா, பணக்காரங்களான்னு பார்க்காதீங்க. முக்கியமா கவுரவம் அந்தஸ்து பார்க்காதீங்க. நம்ம பையன் பொண்ணோட வாழ்க்கையை விட நமக்கு கவுரவம் அந்தஸ்து முக்கியமில்லை. ரொம்ப கெடுபுடி காட்டாதீங்க. அவங்க உங்களை விட்டு காதலிச்சவங்க பின்னாடி ஓடிப்போயிட்டா அப்ப எங்கே போகும் உங்க கவுரவமும் அந்தஸ்தும்ன்னு
யோசிங்க. மாறாக அவங்களை தேடி கண்டுபிடிச்சு வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டீங்கன்னா அப்ப உங்க கவுரவம் அந்தஸ்து குறைஞ்சு போயிடுமே அப்ப என்ன பண்ணுவீங்க... கடைசியா ஒன்னு சொல்றேன்... கவுரவம், அந்தஸ்துல்லாம் கையில புகஞ்சுக்கு இருக்க சிகரட் மாதிரி... அதை வீம்புக்காக கெட்டியா பிடிச்சுக்குட்டு இருந்தீங்கன்னா கைய சுட்டுடும். எப்ப தேவை இல்லைன்னு நினைக்கிறோமோ, அப்ப கீழே போட்டு மிதிச்சுடணும். மொத்தத்துல ஒரு நல்ல விஷயத்துக்காக  கவுரவம் அந்தஸ்தும்பார்க்கறதும்  சரி சிகரெட்டு பிடிப்பதும்  சரி எப்போதுமே ஆரோக்கியமான விஷயம் இல்லை."

"அருமையான கருத்தை சொல்லிருக்கீங்க. அடுத்து..."
"போதுமே... பேட்டியை இத்துடன் முடிச்சுக்கலாமே... எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னொரு தடவை நிறையா பேசுவோம்."
"ஓகே. ரொம்ப நன்றி சார்."
***
வீட்டினுள் நுழைந்தார் இயக்குனர் கணேசராஜன். எதிர்பட்ட தன் மனைவியிடம் கேட்டார்.
"வர்ஷா சாப்பிட்டாளா?"
"இல்லங்க"
"சாப்பிட கொடுத்தியா இல்லையா?"
" கொடுத்துட்டேன். ஆனா, அழுதுகிட்டே இருக்கா. சாப்பிட மாட்டேங்குறா?"
"சரி... நான் பார்த்துக்கறேன்" - என்றவாறு தன் மகளருகில் அமர்ந்தார்.
"வர்ஷா இன்னும் நீ  சாப்பிடலையாமே?"
"எனக்கு சாப்பிட பிடிக்கல."
"சாப்பிட பிடிக்கலையா... நான் சொன்னது பிடிக்கலையா?"
"ரெண்டும்தான்."
"இங்கே பார் வர்ஷா... நீ அந்த பரதேசி பயல காதலிக்கறது எனக்கு பிடிக்கல... இப்பவும் சொல்றேன் நான் உனக்கு பெரிய புரடியூசர் மகனை மாப்பிள்ளையாக்க பேசிக்கு இருக்கேன். நீ என்னன்னா..."
"சினிமாவுல மட்டும் ஏழை பணக்காரன்னு பாக்காதீங்க... காதலிச்சா கல்யாணம் பண்ணிவையுங்கன்னு சொல்றதுலாம் வெறும் பேச்சுதானா?"
"ஓ... நீ அத சொல்றியா... அதுலாம் பணத்துக்கு நான் எழுதிய வசனம். அப்படி எழுதி சம்பாரிச்சதுதான் இந்த பங்களா... கார்... இந்த வசதில்லாம். அந்த மாதிரி எழுதினாதான் மக்கள் ரசிக்கறாங்க. படம் ஓடும். ரீல் லைஃபையும், ரியல் லைஃபையும் போட்டு குழப்பிக்காத மை டியர் சைல்ட். போயி நல்ல பிள்ளையா சாப்பிட்டு தூங்கு... நாளைக்கு புரடியூசர் வீட்டில் இருந்து வாராங்க... உன்னை பொண்ணு பாக்க..."

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு சிறுகதை. 

சனி, 5 பிப்ரவரி, 2011

கேளுங்க....கேளுங்க...கேட்டுகிட்டேயிருங்க.....



நீங்கள் பழம்பாடல் பிரியரா?  புதிய பாடல் ரசிகரா?  நடுத்தர பாடல் விரும்பியா? இதோ உங்களுக்காக ஒரு இணையதளம்.

இதில் அனைத்து பாடல்களும் இருக்கிறது, அனைத்து மதத்தின் பக்தி பாடல், சீரியல் பாடல் என்று அனைத்து பாடல்களும் ஓரிடத்தில் இருக்கிறது. பாடல் கேட்கவும், தரவிறக்கவும் ஒரு அருமையான தளம். உபயோகித்து பாருங்கள்.
அந்த தளத்திற்கான சுட்டி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஜனநாயகமும் பணநாயகமும்-தேர்தல் ஸ்பெசல்


(குறிப்பு: கடந்த 2009-ஆம்  வருடம் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில்  யூத்புல் விகடனில் வெளியானஎன் கட்டுரையை மீண்டும் உங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்).

இது தேர்தல் காலம். நிறைய பணம் புழங்கும் நேரம். முன்பெல்லாம் ஒரு கட்சியின் வேட்பாளர்களை அவரது தியாகமும், போராட்டமும், மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகளுமே தீர்மானித்தது. அதாவது, கட்சி நடத்திய நியாயமான போராட்டங்கள் எத்தனையில் அவர் கலந்து கொண்டார்? எத்தனை முறை சிறை சென்றார்? (இப்போதுள்ளது போல்
தலைவரோ, தலைவியோ ஊழலுக்காக நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு சிறை சென்றால், அதற்காக பயணிகள் இருந்தாலும் கவலைப்படாமல் பஸ் எரிப்பது, பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அதன் தொடர்ச்சியாக சிறை செல்வதல்ல).
மாறாக, இந்தி எதிர்ப்பு மற்றும் இன்னபிற போராட்டங்களும், மிசா காலத்து சிறை கொடுமைகளும், அவரவர் பகுதி, தொகுதிகளில் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவது போன்ற காரியங்கள் தாம் ஒரு வேட்பாளரை தீர்மானித்தது.(ஹூம்... அது ஒரு கனாக்காலம் என்று 1960,70-களில் அரசியலை கவனித்தவர்கள் பெருமூச்சு விடுவது கேட்கிறது).

ஆனால், இப்போது ஒவ்வொரு கட்சியும் நடத்தும் நேர்காணலின் போது ஒருவரிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியே உன் தொகுதியில் உன் ஜாதிக்காரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?, உன்னை வேட்பாளராக நிறுத்தினால் எவ்வளவு 'சி' செலவு செய்வாய் என்பதுதான். சி என்பது அரசியல்வாதிகளின் பாஷையில் கோடி என்பதை நான் கோடிட்டு காட்டவேண்டிய அவசியமில்லை.
இன்றைய அரசியலை கூர்ந்துநோக்கும் அனைவரும் இதை அறிவார்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு ஒருவர் தலைமை
எதிர்பார்க்கும் பதிலை கூறிவிட்டால், தியாகங்களும் உழைப்பும் அங்கே பின்னுக்கு தள்ளப்பட்டு பணபலமும் ஜாதிபலமும் ஒருங்கே பெற்ற அவருக்கே சீட் நிச்சயமாகிறது.
இது, ஏறக்குறைய டெண்டர் விடுவதைப் போல அதிகமான பணத்துக்கு சீட்டை ஏலம் எடுப்பவர் வேட்பாளர் ஆவிடுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட, பணம்தான் பாதாளம் வரை பாய்ந்து அவரது
வெற்றியை உறுதிசெய்து விடுகிறதே..?

இப்படி கோடி கோடியாக செலவு செய்யும் வேட்பாளர்கள் ஜெயித்துவந்ததும் தான் சிலவு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக
எடுப்பதிலேயே குறியாக இருப்பாகள். ஒருவேளை, இத்தனை கோடிகளை செலவுசெய்தும் தோற்றுவிட்டால், இவர்களுக்காகத்தானே இருக்கிறது வாரியம். ஏதாவது ஒரு வாரியத்துக்கு தலைவராகி சுருட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது
வேறுவிஷயம்.

 இத்தனை கோடிகளை செலவுசெய்து ஜெயித்துவந்த இவருக்கு எப்படி மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் வரும்? அதையும் மீறி இவர் நமக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று நாம் நினைத்தால், நம்மைவிட வடிகட்டிய அதிலும்
ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது.

ஒருவர் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்த காலமெல்லாம் காமராஜர், கக்கனோடு மலையேறிவிட்டது. இப்போது உள்ளவர்களால் அவரது மனைவி மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை, இந்த லட்சணத்தில் நமக்கெப்படி சேவை செய்வார்கள்?
ஒரு வேட்பாளர் தான் ஜெயிப்பதுக்காக தன் தொகுதியிலுள்ள வாக்காளர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு குறைந்தபட்சமாக தலா ஐந்நூறு ரூபாய் வீதம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அதற்காக அவர் செலவு செய்யும் தொகை ரூபாய் ஐந்து கோடி. இந்த ஐந்து கோடி ரூபாயை ஏதேனும் ஒரு தொழிலில் போட்டால் கூட மாத வருமானமாக குறைந்தபட்சம் ஒரு சில லட்ச ரூபாய்  கிடைக்கும். அல்லது இரண்டு சதவீத வட்டிக்கு விட்டால்கூட மாதந்தோறும் பத்து லட்சம் கிடைக்கும். அதுகூட வேண்டாம், அந்த ஐந்து கோடியை பேங்கில் டெபாசிட் செய்துவிட்டு வீட்டில் படுத்துக்கிடந்தால் கூட ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

இதையெல்லாம் விடுத்தது இந்த கோடிகளை முதலீடு செய்ய ஒருவர் ஏன் இந்த அரசியலை தேர்வு செய்கிறார் என்று பார்த்தால் காரணம் வெரி சிம்பிள்.
இன்றையச் சூழலில் அரசியலில்தான் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது. பதவிக்கு பதவியும் ஆச்சு. மாதந்தோறும் இலவச ரயில் பயணம், இந்தியா முழுவதும் சுற்றி வர இலவச விமானப் பயணம், தொகுதி முழுவதும் சுற்றிவருவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று பயணப்படி, இலவச தொலைப்பேசி இணைப்பு / அழைப்பு. நாடாளுமன்றத்தில் பேசாமல் இருப்பதுக்காக சம்பளம், அலவன்ஸ் மற்றும் இத்யாதி இத்யாதிகள். முழுவதுமாக மூன்று
வருடத்தை பூர்த்திசெய்துவிட்டலே, பதவியில் இல்லாவிட்டலும் கூட ஓய்வூதியம் இன்னபிற சலுகைகள்.

ஒருவேளை தப்பித்தவறி அவர் அமைச்சர் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்... ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடின்னு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் இழக்க யாருக்குத்தான் மனசு வரும்? இப்படிப்பட்ட அரசியல்வியாதிகளை, மன்னிக்கவும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் அது ஒருதலை பட்சமாகிவிடும். இப்படிப்பட்ட சமூகசேவகர்களை உருவாக்கும் முக்கிய பங்கு இன்னொருவருக்கும் இருக்கிறது. அவர் வேறு யாருமல்ல... சாட்சாத் திருவாளர் வாக்காளர்களாகிய நாம் தான் அவர்.

இந்த வேட்பாளர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரத்திற்காக நம் நம்முடைய பொன்னான வாக்குரிமையை இவர்களிடம் அடகு
வைப்பதால்தான்... இல்லை இல்லை விற்பதால்தான் இப்படிப்பட்ட சுயநல அரசியல் வியாபாரிகளும், அரசியல் விபச்சாரிகளும் தோன்றுகிறார்கள். இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதால்தான், நம் தொகுதிக்கு இவர்கள் ஏதும் செய்யாவிட்டால் நிற்கவைத்து கேள்விகேட்கும் தார்மீக உரிமையையும் நாம் இழந்துவிடுகிறோம்.
நமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு நாம் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு சிறிதளவு தோன்றினால்கூட, மக்கள் ஒன்றும் நமக்கு சும்மா வாக்களிக்க வில்லையே..?

நாம் கொடுத்த பணத்துக்குதானே வாக்களித்தார்கள்? பணத்துக்கு ஓட்டு சரியாப்போச்சு என்ற எண்ணம் மேலோங்கி ஏதும் செய்யாமலே இருந்துவிடுகிறார்கள். இவர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரம் ரூபாயை நாம் நினைத்தால் ஓரிரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ ஏன் ஒரு மாதமே ஆனாலும் தப்பில்லை சம்பாதித்து விடலாம். ஆனால் இவர்களிடம் கைநீட்டி காசு வாங்கிவிட்டால் ஐந்து வருடங்கள் நம்மால் ஏதும் செய்யமுடியாது. கேவலம் அதிகபட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்களிடம் வாங்கிவிட்டோமேயானால் ஐந்து வருடத்துக்கு இவர்களிடம் அடிமையாக இருக்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

ஐந்து வருடத்தில் நாம் எவ்வளவோ சம்பாதிக்க முடியும். ஆனால், ஐந்து வருடத்துக்கு நம் வாழ்க்கைத் தரம் இவர்கள் கொடுக்கும் இந்த ஐந்நூறு, ஆயிரங்களோடு நின்றுவிடுகிறது. அதாவது இந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கைத்தரம் உயர நாம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கிக்கொண்டு இருந்துவிடுகிறோம். (நல்ல வேட்பாளர்களுக்கு நேர்மையான முறையில் வாக்களிப்போருக்கு இந்த சாடல்கள் பொருந்தாது) இப்படிப்பட்ட அவலநிலை மாறவேண்டுமானால் பணத்துக்கு வாக்களிக்கும் நிலையிலிருந்து நாம் மாறவேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை நாம் அவர்களை மாற்றப் போவதில்லை என்கிறது திருக்குர்-ஆன். என்ன ஓர் அருமையான வாசகம். நாம் மாறினால் நம் சமுதாயமும் மாறிவிடும். அப்படி நாம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் நம் தொகுதிக்கு செய்திருக்கும் நன்மையின் அடிப்படையில் வாக்களிக்க பழக வேண்டும். அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி. எந்த மதமாக இருந்தாலும் சரி. சுயேட்சையாக இருந்தாலும் சரி. இப்படி நாலு தேர்தல்களில் நாம் ஊழல்வாதிகளை புறந்தள்ளி நல்லவரை ஜெயிக்க வைத்தோமேயானால், பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியாது என்ற எண்ணம் இந்த அரசியல் வாதிகளுக்கு தோன்றி, நமக்கு நல்லது செய்து நம் மனதில் இடம்பிடிக்க பார்ப்பார்கள். கட்சித் தலைமையும் நல்லவர்களுக்கு சீட் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் பணநாயகம் தோற்கும், ஜனநாயகம் செழிக்கும். அரசியலில் நல்லவர்களின் ஆதிக்கம் மேலோங்கினால்தான் நாடு சிறக்கும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். 


டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு

வியாழன், 3 பிப்ரவரி, 2011

வானவில் பக்கங்கள்


ஒரு கவிதை  

ஆலயங்களில் வர்க்க பேதம்
டீக்கடைகளில் இரட்டை டம்ளர்
பள்ளிகளிலும் சாதி
சுடுகாடும் இடுகாடும் கூட வேறு வேறு
ஆனால் எந்த பேதமுமின்றி
எல்லோரும் ஒன்றாக
சினிமா தியேட்டரில்.........

-----------------------------
ஒரு விளக்கம் 

இப்போதெல்லாம் ஒருவனை திட்ட சாதரணமாகஉபயோகப்படுத்தும்
வார்த்தை கம்னாட்டி பயலே .
கம்னாட்டின்னா என்னன்னு பார்ப்போம்.
தமிழில் கைம்பெண் என்றால் விதவை அதாவது கணவனை இழந்தவள் என்று அர்த்தம்.
கைம் பொண்டாட்டி என்ற வார்த்தையும் விதவை என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தைதான்.
கைம் பொண்டாட்டி என்ற வார்த்தைதான் ப்போது மருவி கம்மனாட்டி ஆகிவிட்டது. கம்னாட்டி பயலேன்னா விதவையின் மகனே என்று அர்த்தம். தயவு செய்து இனி யாரையும் அப்படி திட்டாதீர்கள்.

-------------------------------------


ஒரு டவுட்டு 
ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே குற்றவாளி ஆகமாட்டார். என்று தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே....இத்தனைக்கு பிறகும் ஒத்துக்கொள்ளவில்லைஎன்றால்.....பிறகு எப்போது ஒத்துக்கொள்வார்களாம்?

------------------------------------------------------------------


ஒரு ட்வீட்டு

 500 மீனவர்களுக்காக ஒன்றுமே செய்யாத கலைஞர் ஒரு ராசாவுக்காக என்னவெல்லாம் செய்வார் பாருங்கள்?



 

புதன், 2 பிப்ரவரி, 2011

ஹைய்யா .....நான் கோடீஸ்வரன் ஆகிட்டேன்

ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி வழக்கம்போல என்னோட மின்னஞ்சலை திறந்தேன். அறிமுகமில்லாத புது ஐ.டி-லேர்ந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்துச்சு .
திறந்து என்னன்னு பார்த்தால்...எனக்கு மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு. யூ.கே-லாட்டரி நியூ இயர் புரோமோல நீங்க 10 கோடி பிரிட்டிஷ் பவுண்டு ஜெயிச்சுருக்கீங்க. உங்கள் முகவரி, நாடு, தொலைபேசி என்னை அனுப்பவும்ன்னு.....அதுல எழுதியிருந்துச்சு.....எனக்கு என்ன பண்ணுறதுன்னு ஒண்ணுமே விளங்கல.....என்ன எழவுடா இது நம்ம ஏழையா இருக்க விஷயத்தை லண்டன்ல யாரு சொல்லிருப்பான்னு ஒரே குழப்பம். 
அநாதை சொத்து கித்தை நம்ம பேருல யாரும் எழுதி வச்சுட்டாங்கலான்னு வேறு  யோசனை. பித்து புடிச்சவன்மாதிரி இருந்தேன். பின்னே என்னங்க.....நம்ம ஊரு காசுக்கு எழுநூறு கோடி ரூவா தேறும். அதை வச்சுக்கு எந்திரன் மாதிரி மூணு நாலு படம் எடுக்கலாம்.நம்ம ஒரு கட்சிய ஆரம்பிச்சு வர்ற தேர்தல்ல நல்ல பதிவர்கள் பத்து பேர வேட்பாளரா நிறுத்தலாம் என்ற ரீதியில    என்னன்னவோ யோசனைலாம் வந்துச்சு.

இருந்தாலும் உழைக்காம வர்ற காசு நிக்காதுல்லன்னு துணிஞ்சு ஒரு முடிவெடுத்தேன். 


அய்யா பில்கேட்சுக்கு,
ரஹீம் கஸாலி எழுதிக்கொள்வது,
எனக்கு ஒரு எழுநூறு கோடி ரூபா பணம் வந்துச்சு....அவ்வளவு பணத்தை வச்சுக்கு நான் என்னபன்றது? அதே நேரம் இந்த பணத்தை வச்சுக்கற அளவுக்கு என் நாடும் என் வீடும் பாதுகாப்பானதா இல்லை...அதனால....உங்க அறக்கட்டளையில இந்த பணத்த சேர்த்து உலகம் முழுக்க எவ்வளவோ ஏழைங்க இருக்காங்கல்ல அவங்களுக்கு பிரிச்சுக்கொடுத்துடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
னு

ஒரு மெயில் அனுப்பி, அவரோட பதிலுக்காக காத்திருக்கேன். 
என்ன நான் சொல்றது நமக்கு எதுக்கு அவ்வளவு பணம்....நான் சொல்லுறதை நீங்க  நம்பமாட்டீங்கன்னு எனக்குத்தெரியும். . அதுக்குத்தாங்க எனக்கு வந்த மின்னஞ்சலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன். பார்த்துக்கங்க.....


                                 (படத்தின் மீது கிளிக் பண்ணி படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

பார்த்துட்டீங்கதானே.....இப்பவாவது என்னை நம்புவீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு யாரும் கொடைவள்ளல், பாரி வள்ளல்ன்னு பட்டம் கிட்டம் கொடுத்திட வேண்டாம்.அப்படி கொடுக்கறதா இருந்தா  எனக்கு இந்த பணத்தை மின்னஞ்சலில் அனுப்புனாரு பாருங்க அந்த முகம் தெரியா கோடீஸ்வரன். அவருக்கு கொடுங்க.......


டிஸ்கி-1: இந்த பதிவுக்கு எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க இந்த நாதாரிங்கன்னு தான் தலைப்பு வைக்கலாம்ன்னு இருந்தேன்.ஆனால் ஒரு கேச்சிங்கா இருக்கட்டுமேன்னு இப்படி வச்சுட்டேன்

டிஸ்கி-2: இதைப்போல யாருக்கும்மின்னஞ்சல் வந்தால் ஏமாந்துவிடவேண்டாம்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நானே எடுத்த கண்ணை கவரும் 3D படங்கள் உங்களுக்காக













எப்படி இருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க பாஸ்....
அப்படியே ஓட்டும் போட்டுடுங்க....ஹி...ஹி....
டிஸ்கி: ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு 20 மெகா பிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் யாரும் காப்பி பண்ணாதீங்க......